சுரணை கெட்ட பத்திரிகைகள்
கடைக்காரர் முகத்தை மறைத்துக்கொண்டு தொங்கும் பத்திரிகைகள் விற்கும் கடையில் சிகரெட் வாங்கும்போது குமுதம் சிநேகிதி கவர் ஸ்டோரி தலைப்பு கண்ணில் பட்டது. “சக்கை போடு போடும் சிக்குன் குன்யா”.
சென்னையில் ஆயிரக்கணக்கான (தினமணி தகவலின்படி) பேரைத் தாக்கி உலுக்கியெடுக்கும் சிக்குன்குன்யா ‘சக்கை போடு’ போடுவது அவ்வளவு வேடிக்கையான விஷயமா? இந்த சுரணை கெட்டத்தனம் இதை விட மோசமான இன்னொன்றை நினைவூட்டியது.
பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல வேளையாக அல்பாயுசில் முடிந்த விகடன் பேப்பரின் முதல் பக்கத்தில் சென்னையில் பெய்த மிகக் கடுமையான மழை பற்றிய ஒரு தலைப்புச் செய்தி இது: “சுடுகாட்டில் வெள்ளம்! நாலு பிணங்கள் வெயிட்டிங்!”
அந்த மழையில் குடிசைப் பகுதிகள் பலவும் மூழ்கிப் பலர் பலியானார்கள், கோடிக்கணக்கில் பொருள் சேதம் ஏற்பட்டது. கொஞ்சம் கூட அறிவோ இரக்கமோ இல்லாத ஒரு மண்டையில்தான் இந்தத் தலைப்பு உதித்திருக்க வேண்டும்.
தமிழ்ப் பத்திரிகை உலகில் அறிவு கெட்டத்தனத்திற்கு என்றும் பஞ்சமில்லை என்று குமுதம் சிநேகிதியும் நிரூபிக்கிறது.
பின்குறிப்பாக இன்னொரு காமெடி. சமீபத்தில் பார்த்த விகடனில் சிக்குன்குன்யா பற்றி ஒரு ஐட்டம் போட்டிருந்தார்கள். கொட்டை எழுத்தில் ‘சிக்கன் குனியா’ என்று தலைப்பில் குறிப்பிட்டிருந்தார்கள். சிக்குன்-ஐ சிக்கன் என்று சொதப்பியதற்கு சப்போர்ட்டாக அடுத்த பக்கத்தில் கோழிக் குஞ்சு படமும் போட்டிருந்தார்கள். என்னே விகடன் பாரம்பரியம்!

hitting the nail on the head என்பது இதுதானோ !!!
Vignesh
September 7, 2006
சிக்குன் குனியாவை பறவைக் காய்ச்சலென்று நினைத்து விட்டார்களோ என்னவோ!?
Roshini
September 8, 2006
Vignesh: அந்த nail பொதுவா நம்ம தலைல அவங்கதான் அடிக்கிறாங்க!
Roshini: சிக்கனைப் பார்த்ததும் எனக்கும் அப்படித்தான் தோன்றியது. விகடன்காரர்கள் செய்தாலும் செய்வார்கள்.
சாத்தான்
September 8, 2006